Chennai Rain | ரெட் அலெர்ட் வாபஸ்... நாளை மழை நிலவரம் எப்படி இருக்கும்? - வானிலை மையம் அப்டேட்!
சென்னைக்கு 190 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 17 கி.மீ வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (16.10.2024) மாலை 5.30 மணி நிலவரப்டி அதே இடத்தில் மையம் கொண்டுள்ளது.
இது சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 190 கி.மீ., புதுச்சேரிக்கு கிழக்கு-வடகிழக்கே 250 கி.மீ மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நெல்லூருக்கு தென்கிழக்கே 270 கி.மீ தொலைவில் உள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை அதிகாலையில் சென்னைக்கு வடக்கே, புதுச்சேரி மற்றும் நெல்லூர் இடையே வடக்கு தமிழ்நாடு - தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழகத்தின் மீது 17-ம் தேதி காலை நன்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை (17.10.2024) விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.